திமுக வேட்பாளரை எதிர்த்து சக நிர்வாகி வேட்புமனு.. இருதரப்பு மோதலால் பேரூராட்சி அலுவலகம் சூறை : அன்னூரில் தேர்தல் ஒத்திவைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 2:41 pm
Dmk Clash -Updatenews360
Quick Share

கோவை : மறைமுக தேர்தலில் பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு திமுக வேட்பாளர் வேட்பு மனு செய்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 7 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தலா ஒரு இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. மீதமுள்ள 4 இடங்கள் சுயேச்சைகள் வசம் சென்றன.

பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்றுள்ள நிலையில், ஏற்கனவே அன்னூர் பேரூராட்சியில் சுயேச்சையாக வென்று பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த விஜயகுமார், இம்முறை திமுக சார்பில் 10 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவரை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக திமுக சார்பில் 6 வது வார்டில் போட்டியிட்ட பரமேஸ்வரன் பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளருக்கு எதிராக, அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்னூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு எதிராக திமுகவைச்சேர்ந்த பரமேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மேலும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பேரூராட்சி அலுவலக கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதனால் அந்த இடமே பரபரப்பான சூழ்நிலையில் ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Views: - 658

0

0