கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தி கைதிகள் : ஜெயிலரிடம் போட்டுக் கொடுத்த சக கைதி மீது சரமாரி தாக்குதல்…!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 11:20 am

கோவை : கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தியதை ஜெயிலரிடம் சொன்னதால் கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதி கொண்டனர்.

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக உள்ளனர். இந்நிலையில், சிறை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தியதை சக கைதி மன்சூர் என்பவர் ஜெயில் வார்டனிடம் கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக மன்சூருக்கும், மற்ற சில கைதிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று மன்சூர் முதல் பிளாக்கில் இருந்து புத்தகம் எடுப்பதற்காக வால்மேடு 3வது பிளாக்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது 5 கைதிகள் அவரை வழிமறித்து ‘நீ எப்படி ஜெயிலுக்கு உள்ளே செல்போன் பயன்படுத்துவதை ஜெயிலரிடம் சொல்லலாம்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மன்சூரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சிவக்குமார் என்பவர் கற்களால் தாக்கியதில், மன்சூருக்கு பின்தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த மற்ற கைதிகள் ஜெயில் வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தாக்குதலில் காயமடைந்த மன்சூர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் வார்டன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிவக்குமார், அன்னபாண்டி, ஷேக் முகமத், முனியாண்டி, பிரவீன் குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட சிறை கைதிகள் மீது தாக்குதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!