சோகத்தில் முடிந்த பள்ளி மாணவர்களின் சுற்றுலா… கோத்தகிரி சென்று விட்டு திரும்பிய போது கார் விபத்து.. 2 பேர் பலி…!!

Author: Babu Lakshmanan
16 April 2022, 11:41 am
Quick Share

கோவை : நண்பர்களுடன் கோத்தகிரி சென்றுவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த கார் விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முக்தார் அலி. இவரது மகன் முகமது இர்பான்(18). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இன்று காலை 6 மணி அளவில் பாரதி நகரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரது பிளஸ்-1 படிக்கும் மகன் முகம்மது தவ்பீக் (16), அப்துல் ஹமீது என்பவரது பிளஸ்-1 படிக்கும் மகன் ஆரிப் என்கிற முகமது ஆரிப் (16). கைசர் அகமது என்பவரது 10ம் வகுப்பு படிக்கும் மகன் காலித்(16), சலீம் என்பவரது பிளஸ்1 படிக்கும் மகன் ஹர்ஷத் (16), ஆகிய 5 பேரும் ஒரு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு கோத்தகிரி சென்றனர்.

பின்னர் அங்கு இருந்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பினர். காரை முகமது இர்பான் ஓட்டி வந்தார். கார் கோத்தகிரி ரோட்டில் கடைசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற முகம்மது தவபீக் (16), முகமது ஆரிப்(16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 695

0

0