கோவையில் மோடி பிறந்தநாளை கொண்டாடிய பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
19 September 2020, 1:41 pmகோவை : கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடியதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் கடந்த 17ஆம் தேதி நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.
கோவையிலும் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக செல்வபுரம் சிவாலயா ஜங்ஷன் அருகில் பாஜகவினர் நேற்றும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடினர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்திக், ஆர்.எஸ்.புரம் மண்டல தலைவர் டி.வி.குமார், மற்றும் கட்சி தொண்டர்கள் கணேஷ், தீனா, முனீஸ்வரன், நாச்சிமுத்து, நவீன், சுப்பிரமணி ஆகிய 8 பேர் மீது செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.