கோவை அரசுப்பள்ளியில் சாதி பாகுபாடா..? தலைமையாசிரியர் போட்ட உத்தரவு… மாணவன் உடலில் தீப்பற்றி எரிந்த ஷாக் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 1:05 pm
Quick Share

கோவையில் பள்ளி கட்டிடத்தில் இருந்த தேன் கூட்டை கலைக்குமாறு தலைமை ஆசிரியர் கட்டளையிட்ட நிலையில், தேன்கூட்டை கலைக்க முயன்ற சிறுவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் கட்டிடத்தில் தேன்கூடு கட்டியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனிடம், தலைமையாசிரியர் பழனிச்சாமி, கையில் தீப்பந்தத்தை கொடுத்து தேன் கூட்டை கலைக்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கையில் தீப்பந்தத்துடன் சென்ற சிறுவன் தேன்கூட்டை கலைக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக சந்துருவின் உடையில் தீப்பற்றியது. இதில் மாணவனின் அடிவயிறு மற்றும் அந்தரங்க உறுப்பு ஆகியவற்றில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தனர். இதனை தொடர்ந்து, சிறுவன் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். படுகாயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆலந்துறை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவ மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மாணவனை தேன் கூட்டை கலைக்க கட்டளையிட்டு மாணவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயம் அடைந்த மாணவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 216

0

0