நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…

Author: kavin kumar
5 February 2022, 2:00 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் நடைபெறும் வேட்புமனு பரிசீலனை பணிகளை மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளுக்கும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கும் 14 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 401 வார்டுகளில் நேற்று மாலை 5 மணி வரை பெறப்பட்ட மனுக்கள் அனைத்த இன்று மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் போட்டியிடக் கூடிய திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், எஸ்டிபிஐ,

நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும். சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அரியமங்கலம், கோ -அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களில் வேட்புமனுகள் சரிபார்ப்பு பணி வேட்பாளர்கள் முன்னிலையில் காலை முதலே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்பு மனுக்களில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வேட்பு மனுக்களை உறுதி செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் அனைத்து மனுக்களும் மறுபரிசீலனை முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

மேலும், வரும் 7ம்தேதி வேட்புமனு திரும்பப் பெறப்படும். அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வரும் 9ம் தேதி அதிகாரிகள் வெளியிட உள்ளனர். நடைபெறும் வேட்புமனு பரிசீலனை பணிகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் 5நகராட்சி மற்றும் 14 பேர் ஊராட்சிகளிலும் பெறப்பட்ட மற்றும் மனுக்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் அனைத்து கோட்ட அலுவலகங்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 933

0

0