நீரை அருந்திய சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழந்த பசு மாடுகள்… தீவனத்தில் விஷம்? கதறி அழுத விவசாயி குடும்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 12:29 pm
Cow Dead - Updatenews360
Quick Share

வேடசந்தூர் அருகே தீவன நீரை குடித்த 5 பசு மாடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தொட்டய கவுண்டனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி(43), விவசாயி. இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். பெரியசாமி விவசாயத்துடன் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை இவரது மனைவி வடிவுக்கரசி மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை தொட்டியில் குடிக்க வைத்துள்ளார்.

அதை குடித்த சிறிது நேரத்தில் 5 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து அசைவற்று கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வடிவக்கரசி இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

வடமதுரை கால்நடை உதவி மருத்துவர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளுக்கு சிகிச்சையளித்தார். ஆனால் அதற்குள் 5 பசு மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.

அதன்பின்னர் கால்நடை மருத்துவர் நடத்திய ஆரம்பகட்ட சோதனையில் பசுக்கள் குடித்த தீவன நீரில் யூரியா கலந்திருப்பது தெரியவந்தது.

எனினும் இறந்த மாடுகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே இறப்பிற்கான காரணம் குறித்து உறுதியாக தெரியவரும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

தீவனத்தில் தவறுதலாக யூரியா கலந்ததால் மாடுகள் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதும் காரணமாக என்று வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி வளர்த்த 5 பசு மாடுகள் தீவன நீரை குடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 527

0

0