மது அருந்த பணம் தர மறுத்த தாயை உயிருடன் புதைத்த கொடூர மகன் : விழுப்புரம் அருகே பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 3:55 pm
Mother Alive Bury - Updatenews360
Quick Share

விழுப்புரம் : குடிக்க பணம் கேட்டதற்கு கொடுக்க மறுத்த தாயை அடித்து உயிருடன் புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மூன்று மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு வீட்டுக்கு சென்ற சக்திவேல், தனது தாயிடம் காதில் போட்டிருந்த நகை பணம் கொடு, இல்லையெனில் குடும்ப அட்டை கொடு எனக் கேட்டுள்ளார்.

இதற்கு தாய் அசோதை (வயது 75) தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்து, தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, ஆத்திரமடைந்த சக்திவேல், தாய் அசோதையை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். தாய் இறந்துவிட்டதாக எண்ணிய சக்திவேல், வீட்டின் பின்புறத்திலேயே பள்ளம் தோண்டி, தாய் அசோதையை உயிருடன் புதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்து அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் சென்று மதுபோதையில் இருந்த சக்திவேலை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அசோதை உடலை தோண்டி எடுப்பதற்கான பணிகளில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட அசோதை உடல் கூராய்வுக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து, அரகண்டநல்லூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தாயை அடித்து உயிருடன் புதைத்த மகனின் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 328

0

0