தாசில்தாரை தாக்கிய வழக்கு… மு.க. அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜர் ; மதுரை நீதிமன்றம் போட்ட உத்தரவு…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 1:57 pm

2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மு.க.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து, மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாசில்தாரை தாக்கிய வழக்கு வழக்கின் தீர்ப்புக்காக பிப்ரவரி 12ஆம் தேதிக்கு வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…