முதலமைச்சர் குறித்து அவதூறு.. வைரலான பதிவு.. நாம் தமிழர் கட்சி பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 1:43 pm

முதலமைச்சர் குறித்து அவதூறு.. வைரலான பதிவு.. நாம் தமிழர் கட்சி பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ்!!

தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அருகே உள்ள தகடூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி என்ற காளியப்பன். இவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இவர், திமுக பற்றியும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில், காளி தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து மோசமான முறையில் எடிட் செய்யப்பட்டிருந்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியை நேற்று நள்ளிரவு தருமபுரியில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், காளியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட காளி, விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, ஆகியோர் குறித்தும் அவதூறாக பல்வேறு பதிவுகள் இட்டிருந்ததால் அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாதக நிர்வாகி காளி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “தம்பி காளி போன்றவர்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு வழக்குப் பாய்ச்சப்பட்டு, நள்ளிரவில் கைது செய்யப்படுவது அப்பட்டமான அராஜகம்” என இடும்பாவனம் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • a business man gave complaint o pandian stores 2 actress reehana முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?