புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 11:51 am

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

ஆங்கிலப்புத்தாண்டு தினமான இன்று, அரசு விடுமுறையை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

இதனால் மலைக்கோயில் வெளியே உள்ள பிரகாரங்கள் அனைத்தும் பக்தர்களின் வரிசை நீண்டு காணப்பட்டது. மலைக்கோயில் செல்ல வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் மலைக்கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்‌ செய்தனர். மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அடிவாரம் கிரிவீதி, சன்னதி வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர்.

மேலும், மலைக்கோயிலில் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படும் சுவாமி படம் பொறிக்கப்பட்ட காலண்டர்களையும் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

  • no use of thug life movie release in karnataka said by famous producer கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!