திமுக நிர்வாகியை நாக்கை துருத்தி கொண்டு அடித்த அமைச்சர் ஐ.பெரியசாமி… பொது நிகழ்ச்சியில் பரபரப்பு… அதிர்ச்சியில் மக்கள்.!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 11:49 am

பொதுமக்கள் முன்னிலையில் திமுக நிர்வாகியை நாக்கை துருத்தி கொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலையில், மாங்கரை ஊராட்சியில் புதிய நியாயவிலைக்கடை, தருமத்துப்பட்டி ஊராட்சி டி.புதூரில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பின்னர், எம்.அம்மாபட்டி, மாங்கரை, கோனுார், கசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், கசவனம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள கோவில் மண்டபத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட்டியலின மக்கள் தங்கள் பகுதியில் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என ஊரக வளர்ச்சி துறை அமைச்சரிடம் புகார் அளிக்க மேடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மூன்றாவது கிளை திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் முருகவேல் மனு கொடுக்க சென்ற மக்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் முருகவேல் வெளியே செல்லும் பொழுது, அப்பகுதி மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முருகவேலிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மண்டபத்திலிருந்து வெளியில் வந்த ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, தொமுச கிளைத் தலைவர் முருகவேலை நாக்கை துருத்திக் கொண்டு லேசாக அடித்தார். இதனை அடுத்து முருகவேல் மண்டபத்தை விட்டு வெளியே சென்றார். இதனால் கழக உடன்பிறப்புகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் அப்பகுதி மக்களிடம் தங்கள் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து சென்றார்.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் நிகழ்ச்சி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் சக்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?