திமுக நிர்வாகியின் கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் பலி: காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
9 February 2022, 12:52 pm
Quick Share

கோவை: கோவையில் திமுக நிர்வாகியின் கார் மோதி முதியவர் பலியான விபத்தில் டிரைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்

சிவானந்தா காலனி – கண்ணப்பன் நகரில் உள்ள பாலத்தின் அடியில் இன்று மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


தகவலறிந்து வந்த அந்த முதியவரின் உறவினர்கள் கார் ஓட்டுநரை முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு முதியவரின் உறவினர்களை சமாதானம் செய்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்த முதியவர் 60 வயதான நடராஜன் என்பவர் என தெரியவந்துள்ளது. மேலும், விபத்தை ஏற்படுத்திய அந்த கார் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்துவின் கார் என்பதும், காரில் அவர் இல்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 798

0

0