மகனை இழந்த சோகம்… தி.மு.க பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!

Author: kavin kumar
1 February 2022, 8:30 pm
Quick Share

கன்னியாகுமரி : ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட களியக்காவிளையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கவிளை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான சகாயம் என்பவருக்கு திருமணமாகி சுகந்தியம்மாள் என்ற மனைவியும் டிபுரோகிலி என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் பெங்களூரில் எம்பிபிஎஸ் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வாகன விபத்தில் பெங்களூரில் வைத்து இறந்துள்ளார். இதனை தொடர்ந்து வெளி உலக தொடர்பை தவிர்த்து வந்த இவர்கள் முழு நேரமும் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். மகன் இறந்த துக்கம் அவ்வப்போது அவரை வாட்டி வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது வீட்டில் இரவு நேரத்தில் விளக்குகள் எரியவில்லை என பக்கத்து வீட்டை சேர்ந்த சுகுமாரன் என்பவர் குளப்புறம் ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை கேட்டு சகாயம் வீட்டிற்கு வந்த குளப்புறம் ஊராட்சி தலைவர் மனோன்மணி அவரது வீட்டின் உள்ளே சென்று பார்க்க முயன்ற போது வீட்டின் முன்பக்க கதவுகள் திறக்ககூடிய அளவில் மூடி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சகாயம் மற்றும் அவரது மனைவி சுகந்திய்ம்மாள் ஆகியோர் வீட்டின் ஹாலில் நைலான் கைரில் அருகருகே தூக்கில் தொங்கியபடி நாக்கு வெளியே தள்ளியபடி உடல் முழுவதும் இரத்தம் வழிந்தவாறு நின்றிருந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊராட்சி தலைவர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைபற்றி அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தூங்கி நின்றிருந்த இடத்திற்கு அருகில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் தங்களது மரணத்திற்கு யாரும் காரணமில்லை தங்களது செல்ல மகனை இழந்த துக்கத்திலேயே இந்த முடிவை எடுக்கிறோம் என எழுதி இருவரும் கையெழுத்து இட்டிருந்தனர். அதில் அவர்கள் கடிதம் எழுதிய தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் மூலம் அவர்கள் கடந்த 30 ம் தேதி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1767

0

0