துபாயாக மாறிய எண்ணூர்… ஒரு அடி தோண்டினாலே.. வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 2:01 pm

சென்னை – எண்ணூரில் அடுத்தடுத்து இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழையினால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீதிகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. படகு மூலம் பொதுமக்களை போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்டனர். வாகனங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அதேபோல, மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மழை நீரோடு, கச்சா எண்ணெய் வெளியேற்றப்பட்டது. இது கடலுடன் கலந்து கடலில் பல கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் படலம் தென்பட்டது. இதனால், மீனவர்களும், மீன்களும், மீன்பிடி படகுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனிடையே, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெட்டுக்குப்பம் பகுதியில் பீச் மணலை தோண்டும் போது, ஒரு அடி கூட தோண்டாத நிலையில், எண்ணெய் வெளியேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துபாய் போல ஒரு அடிக்கும் குறைவாக தோண்டினால் எண்ணெய் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களின் குழந்தைகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?