மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழப்பு … சினிமா படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சோகம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 2:21 pm
Quick Share

திருவள்ளூர் ; செங்குன்றத்தில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் “அகரம் காலனி” என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது.

நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்த போது, காடா லைட் உபகரணத்தை லைட்மேன் சண்முகம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தள்ளி செல்லும் போது, காடா லைட் தடுமாறி அந்த தெருவில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் பட்டதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் இருவரும் காயமடைந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த போது, லைட்மேன் சண்முகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், லைட்மேன் சண்முகத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு லைட்மேன் ரஞ்சித்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 289

0

0