தொடரும் சிறுத்தை நடமாட்டம்.! சாலையில் நடுவே ஒய்யாரமாக வலம் வந்த சிறுத்தை.!!
3 August 2020, 1:21 pmஈரோடு : சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து அதிகரித்து வரும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி புதுகுய்யனூர் அருகே சிறப்பு இலக்கு அதிரடிப்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் இப்பகுதியை சுற்றி இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுவது வழக்கம்.
மேலும் பண்ணாரி வனப்பகுதியை ஒட்டியுள்ள சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி புதுகுய்யனர் கிராமத்திற்குள் புகுந்து விவசாயிகள் வளர்ந்து வரும் கால்நடைகளை தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சிறப்பு இலக்கு அதிரடிப்படை அலுவலகம் அருகே உள்ள சாலையில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றது. இக்காட்சியை சிறப்பு இலக்கு அதிரடிப்படை காவலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.