ஊழல் மற்றும் கொள்ளையின் மறுஉருவம்தான் திமுக… நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு ; குஷ்பு கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
21 December 2023, 7:33 pm
Quick Share

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2002ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த தீர்ப்பின் மூலம் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார்.

மேலும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி பெற வேண்டும் என்றும், தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பெறாவிட்டால் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் தடை உத்தரவை பெறாவிட்டால், விசாரணை நீதிமன்றம் வாரண்ட் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். திமுக ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாகும், மேலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நேரம் இது. திமுக அமைச்சர் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். நமது நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை இப்போது வலுவடைந்துள்ளது.

Views: - 275

0

0