உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவியை சால்வை அணிவித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ்… தண்ணீர், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக உருக்கம்!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 4:33 pm

திருவாரூர் : உக்ரைனில் இருந்து மீண்டு சொந்த ஊருக்கு வந்த மாணவியை முன்னாள் அமைச்சர் காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்கிற மாணவி உக்ரைன் நாட்டில்  இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த நிலையில், இன்று சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்திற்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரடியாகச் சென்று மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளின் தற்போதைய நிலை குறித்தும் மாணவியிடம் கேட்டறிந்தார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, உக்ரைன் நாட்டில் தவித்து வரும் மாணவ மாணவிகளை மீட்டு வந்துள்ள மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் அங்கு உள்ள அனைத்து மாணவர்களையும் மீட்டு கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி டெல்டா மாவட்டங்களில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களை மூடாமல் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவி அபிராமி, “உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வார காலம் உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வந்தோம். ஒரு சிறிய நிலவறைக்குள் ஏராளமான மாணவ மாணவிகள் அடைபட்டுக் கிடந்தோம்.குறிப்பாக சுமி பகுதியில் சிக்கியுள்ள மாணவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும்,” என மாணவி தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!