ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி : விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை முயற்சி!!

Author: kavin kumar
27 January 2022, 8:35 pm
Quick Share

தருமபுரி : அரூர் அருகே ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். விஜயகுமார் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை அருகே தங்களது வீடு கட்டியுள்ளார் அப்பொழுது பொதுப் பாதையில் சற்று ஆக்கிரமித்து கட்டியதாகக் கூறப்படுகிறது அப்போது கிராம மக்கள் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக எழுப்பிய புகாரில் கிராம மக்களுக்கும் விஜயகுமார் குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது கிராமத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனை விஜயகுமார் கிராமத்தினரை அவமானப்படுத்தும் விதமாக பரிசுப் பொருளுடன் காலனியை கட்டி தெருவில் தொட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விஜயகுமாரை அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளனர் அப்பொழுது அவர் பஞ்சாயத்தார் பஞ்சாயத்து பேச்சுக்கு கட்டுப்படவில்லை. தொடர்ந்து ஊர் கட்டுபாட்டை மீறியதாக ஊர் தர்மகர்த்தா ராஜசேகர், ஊர்கவுண்டர் கௌவுரிசெல்வம் உள்ளிட்டோர் கட்டபஞ்சாயத்து செய்து விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்தனர். இதனால் விஜயகுமார் நடத்தி வரும் மளிகை கடையில் யாரும் பொருட்கள் வாங்க கூடாது அப்படி பொருட்கள் வாங்கினால் 500 ரூபாய் அபராதம் என தண்டுரா போட்டுள்ளனர்.

மேலும் மற்றும் இவர்களிடம் உறவினர்கள் யாரும் பேசக்கூடாது, கோயிலுக்கு செல்ல தடை, கிராமத்தில் பொது இடங்களில் வருவதற்கு தடை என ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து திங்கள்கிழமை அரூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விஜயகுமார் குடும்பத்தினர் மற்றும் இருதரப்பினரையும் வரவழைத்து காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தை திருப்தியில்லாத விஜயகுமார் குடும்பத்தினர் உரியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டனர்.

ஆனால் ஊரில் பல பேர் பல விதமாக பேசியதை கேட்ட விஜயகுமார் மனமுடைந்து இரவு 2 மணி அளவில் எலி பேஸ்ட் மருந்தை குடித்துவிட்டு, வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இதனையறிந்த இவரது அண்ணன் சக்திவேல், உடனடியாக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், விஜயகுமார் தற்கொலை முயற்சி செய்தார். எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து அரூர் வட்டாட்சியர் கனிமொழி, காவல் துறையினர் ஈட்டியம்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்பொழுது விஜயகுமார் ஆக்கிரமித்து வீடுகட்டி இடம் குறித்து, நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது, வேண்டுமென்றே கிராமமக்களை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், விஜயகுமார் குடும்பத்தினர் செயல்படுவதாக கிராமமக்கள் வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து இருதரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கான அழைத்துள்ளார். தொடர்ந்து இரு தரப்பினரையும் விசாரணை செய்த பின், அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கவுள்ளார். இந்த சம்பவத்தால், அரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 1784

0

0