குறைஞ்சது 100, 200…. ஏறியது 600 ரூபாயா..! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலையால் வாடிக்கையாளர்கள் ‘ஷாக்’!!
29 September 2020, 11:11 amஒரு வார காலமாக இறங்கு முகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது.
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.
இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது
கடந்த வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த தங்கம் விலை, ரூ.1000க்கும் அதிகமாக சரிந்திருந்தது. இதனால், இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,528க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ. 38 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்தது. கிராமிற்கு ரூ.72 அதிகரித்து ரூ.4,816-க்கு விற்பனையாகி வருகிறது.