திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு ; கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்.. முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது தடியடி..!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 4:33 pm
Quick Share

கரூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத விவகாரத்தில் கோட்டாட்சியர்கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும் உள்ளூர் வீரணம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் தொடர்ச்சியாக சாதிய பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. கோவிலுக்குள் சென்ற இளைஞரை சட்டையை பிடித்து கோவிலுக்குள் வரக்கூடாது என்று வெளியே தள்ளியதால் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் நேற்று அதிகாரிகள் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கோவிலை தற்காலிகமாக இழுத்து பூட்டினர்.

இருவரும் சுமூகமாக செல்வதாக கூறிய நிலையில், இன்று மீண்டும் பட்டியல் சமூக மக்களை திருவிழாவில் அனுமதிக்காமல் சுவாமி கரகத்தை குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் எடுத்துச் சென்று ஊர் கேணியில் விட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு பிரிவினடைய மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் காளியம்மன் கோவில் இழுத்து பூட்டப்பட்டு குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதையடுத்து, கோட்டாட்சியர் புஷ்பாதேவி, தாசில்தார் முனிராஜ் உள்ளிட்ட அதிகாரிகளை மூன்று மணி நேரமாக பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பிறகு காவல்துறை லேசான தடியடி நடத்தி விடுவித்து, அதிகாரிகள் வந்த வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

அப்போது வாகனம் அதிவேகமாக சென்றபோது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது கோட்டாட்சியர் வாகனம் மோதியதாக கூறப்படும் நிலையில், தூக்கி வீசியதில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 242

0

0