தனிமையில் பேசும் போது காதலியுடன் சண்டை.. ரூ.70 லட்சத்தை ஒரு நிமிடத்தில் பொசுக்கிய இளம் மருத்துவர் : போச்சே… பென்ஸ் கார் போச்சே..!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 11:45 am
Quick Share

காதலியின் மீது உள்ள கோபத்தில் இளம் மருத்துவர் ஒருவர், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொகுசு பென்ஸ் காரை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் உள்ள குளம் அருகே பென்ஸ் காரில் வந்த இளம் காதல் ஜோடிகள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென காதலன் காதலிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆவேசமடைந்த காதலன் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது சொந்த சொகுசு பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

நேற்று இரவு குளக்கரை அருகே கார் ஒன்று தீ பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ பற்றி எரிந்த காரை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.

சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின் (28) என்பவரது கார் என தெரியவந்தது.

கவின் காஞ்சிபுரம் காரை பேட்டை பகுதியில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு முடித்துள்ளார். ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படிக்கும் காவியா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். தினந்தோறும் தன்னுடைய காதலியுடன் ராஜகுலம் அருகே உள்ள குளம் அருகே இனிமையான சூழலில் அமர்ந்து நீண்ட நேரம் பேசுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு எப்போதும் போல ராஜகுலம் பகுதியில் காதலி காவியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆவேசமடைந்த இளம் மருத்துவர் கவின், தனக்கு சொந்தமான 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு பென்ஸ் காரை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கித் தந்த 70 லட்சம் மதிப்புள்ள காரை, காதலி மீது ஏற்பட்ட கோபத்தினால் இளம் மருத்துவர் ஓருவர் தீ வைத்து எரித்த சம்பவமும், மருத்துவரின் மனோநிலையும் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கவின் மற்றும் காவியா ஆகியோர் புகார் கொடுக்காததால், காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 426

0

0