மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய மின் உதவி செயற்பொறியாளர்..!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 9:17 pm
Quick Share

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள காடுபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முத்துகணேஷ் என்பவர் மின்இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலம் உபமின்நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில், பெயர் மாற்றம் செய்ய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சோழவந்தானை சேர்ந்த குணசேகரன் என்பவர் முத்து கணேஷிடம் ரூ.2500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயி முத்துகணேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டினை முத்து கணேஷிடம் வழங்கி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.சத்தியசீலன் தலைமையிலான போலீசார் மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்பொழுது. லஞ்ச பணம் பெற்ற உதவி செயற்பொறியாளர் குணசேகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 219

0

0