எதற்காக வந்தீர்கள்…? தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு..? காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. நைசாக நழுவிய மதுரை மேயர்…!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 4:38 pm
Quick Share

மதுரை : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி, மதுரை துர்கா காலனியில் மேயர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை 97 வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனி பகுதியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 25 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பூமி பூஜை நடைபெற்ற பிறகு காரில் ஏறி மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல இருந்த மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்தின் காரை அப்பகுதி மக்கள் வழிமறித்தனர்.

தொடர்ந்து, எதற்காக வந்தீர்கள்…? என்ன பூமி பூஜை நடக்கிறது..? இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் என்ன செய்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பினர். இவை அனைத்திற்கும் அதிகாரிகள் மற்றும் மேயர் பதில் அளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டு போது, அவர்களது காரை அப்பகுதி பொதுமக்கள் வழிமறித்தனர்.

தேர்தலின் போது எங்களது அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள்..? ஆனால், எதையும் செய்யவில்லை என்றும், இப்பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் உள்ளீர்கள், பதில் சொல்ல வேண்டும் என்று அதிகாரிகளிடம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மக்களின் கேள்விக்கு எதற்கும் பதில் அளிக்காமல் மதுரை மேயர் இந்திராணி காரின் உள்ளே அமர்ந்து இருந்தார். முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் பேசி சமாதானப்படுத்திய நிலையில், மதுரை மேயர் சென்ற காரை அங்கிருந்து நைசாக அப்புறப்படுத்தினார். இந்த முற்றுகை போராட்டத்தால் அரைமணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Views: - 642

0

0