டூவீலர் உதிரி பாகம் விற்பனை கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்… கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 1:52 pm
Quick Share

மதுரை அருகே முன்பகை காரணமாக கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்கள், உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம். வயதான 44 இவர், மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் டூவீலர் பொருட்கள் விற்பனை செய்யும் இந்தியன் சைக்கிள் மார்ட் என்ற கடையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தியும் இவரது கடையில் பணியாற்றி வருகிறார். அண்ணன், தம்பி இருவரும் கடை நடத்தி வரும் நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் ராஜ் ஆகிய இருவரும் முன்பகை காரணமாக கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த மர நாற்காலியை எடுத்து முருகானந்தத்தை தாக்கியுள்ளனர். முருகானந்தம் தாக்கப்படுவதை கடைக்குள் இருந்து பார்த்த அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி, அஜித்குமார் மற்றும் ராஜ் இருவரையும் தடுத்துள்ளார்.

அப்போது, கிருஷ்ணமூர்த்தியையும் தாக்கிய நிலையில், முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி இருவரும் கூச்சலிடவே அருகில் இருந்த மற்ற கடைக்காரர்கள், பொதுமக்கள் முன் குவிந்ததால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட படுகாயம் அடைந்த முருகானந்தம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அஜித் குமார், ராஜு என்ற இருவரும் முன்பகை காரணமாக, தங்களது கடைக்கு வந்த கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தன்னையும், தனது சகோதரனையும் தாக்கியதோடு, ராஜூ என்பவர் மறைத்து வைத்திருந்த 4 அடி உயர கத்தியை எடுத்து கொலை செய்ய முயன்ற போது, பொதுமக்கள் கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவித்துள்ளார். மேலும், தப்பி ஓடியவர்கள் என்றைக்கு இருந்தாலும் உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டல் விடுத்து சென்றதாகவும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் வாலிபர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டூ வீலர் விற்பனை பொருட்கள் கடைக்குள் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டூவீலர் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாக்குவாதம் செய்து வாலிபர்கள் இருவர் கடை உரிமையாளர்களை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 239

0

0