அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்… சண்டையை விலக்கி விட்டு ஆசிரியை செய்த செயல் ; விசாரணை நடத்த பாய்ந்த உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 4:02 pm
Quick Share

கோவை ; கோவை அடுத்துள்ள ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனை பள்ளி ஆசிரியை கண் மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த ஆலாந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணகான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கான தனியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வகுப்பில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 19 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் எட்டாம் வகுப்பு மாணவனுக்கும், ஆறாம் வகுப்பு மாணவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது, அந்த பகுதியை கடந்து சென்ற தமிழ் ஆசிரியை பருவதம்மாள் இருவரையும் பிரித்து கண்டித்ததோடு, எட்டாம் வகுப்பு மாணவனை அறைக்கு அழைத்து சென்று தரையில் மண்டியிட வைத்து முதுகில் பெரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான மாணவனின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெற்றோர் மற்றும் ஆசிரியரை சமாதானப்படுத்தி இனி இது போல் நடக்காது என சமரசம் செய்த வைத்துள்ளனர்.

இதனிடையே, பள்ளி மாணவனின் முதுகில் ஆசிரியை தாக்கியதில் ஏற்பட்ட காயங்களுடன் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இது தொடர்பாக இருதரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், எட்டாம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவனை கழுத்தை நெறித்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக, கண்டிப்பதற்காக மாணவனை அடித்ததாகவும், அதே சமயம் பெற்றோர்கள் புகார் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தவர், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Views: - 422

0

0