சிசிடிவி-யை பார்த்து அதிர்ந்து போன செக்யூரிட்டி…ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ; இளைஞர் சுற்றி வளைத்து கைது..!!!

Author: Babu Lakshmanan
24 April 2024, 1:36 pm

சென்னை ; செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி.புறவழிச் சாலையில் பழைய சார் பதிவாளர் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி இயங்கி வருகின்றது. இங்கு அந்த வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது.

மேலும் படிக்க: பெற்ற தாயையே கத்தியால் குத்திக் கொன்ற மகன்… சிறுசண்டையால் சின்னாபின்னமான குடும்பம்.. போலீசார் விசாரணை

நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர், கல்லை கொண்டு உடைக்க முயற்சித்தபோது, இதனை சிசிடிவி காட்சியில் கண்காணித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி, இது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!