மாற்று சமூகப் பெண்ணை காதல் திருமணம் செய்த மகன்… காதலனின் தாயை பெண்ணின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கிய கொடூரம்!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 12:46 pm
Quick Share

சங்கராபுரம் அருகே முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அப்பெண்ணின் உறவினர்கள் காதலனின் தாயை சாதிப் பெயரைச் சொல்லி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள S. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் சூர்யா. மேலும் சூரியாவின் குடும்பத்தினர் அதே கிராமத்தில் முடி திருத்தும் வேலையை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சூர்யா தொழில் கல்வி (ITI) முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சூர்யாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும், சூர்யாவும் அந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், அப்பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் வீட்டிற்கு சென்று கடந்த சில மாதங்களாகவே சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சூர்யா திருமணம் செய்து கொண்ட மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் உறவினர்கள், உன் மகன் எங்கே எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு என் மகன் எங்கு சென்றான் என்று எனக்கு தெரியவில்லையென கூறியுள்ளார். அதற்கு பெண்ணின் உறவினர்கள், ‘உன்னை அடித்து கொலை செய்தால், உன் மகன் தானாக வருவான்’, எனக் கூறி சூர்யாவின் அம்மா சுமதியை அசிங்கமாக பேசியும், அவர் சார்ந்த சமுதாயப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியும், சூர்யாவின் வீட்டிலிருந்து தரதரதவென அடித்து இழுத்து வந்து அங்குள்ள ஒரு கோயிலில் அப் பெண்ணின் உறவினர்கள் சுமதியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சூர்யாவின் தாய் சுமதி தற்போது கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு பெண் என்று கூட பார்க்காமல் சாதிய வெறியாட்டத்தோடு ஊருக்கு மத்தியில் வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், அப்பெண்ணை தாக்கியவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சூர்யாவின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 313

0

0