கோவையில் மேயர் கனவுடன் பிரச்சாரம் செய்த முக்கியப்புள்ளி : காலை வாரிய திமுக உடன் பிறப்புகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 8:00 pm

கோவை : வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவையின் மேயர் என்ற கனவுடன் பிரச்சாரம் செய்த திமுக பெண் நிர்வாகிக்கு கட்சி நிர்வாகம் டாட்டா காட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் திமுக-அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதற்கு முன்னதாக, அதாவது, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே திமுகவை சேர்ந்த மீனா ஜெயக்குமாரை கோவை மேயர் பொறுப்பில் அமர வைக்க திமுக திட்டமிட்டதாக தகவல் பரவியது.

இதனால் திமுக உடன்பிறப்புக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். மேலும், சீட் உறுதி என்பதால் நேரம் தாழ்த்தாமல் பிரச்சாரத்தைத் தொடங்க அறிவுறுத்தினர். அதன் பேரில், தனக்கு கோவை மாநகரில் 57 வது வார்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே தான் கோவையின் வருங்கால மேயர் என்ற கனவுடன் வளம் வந்தார் மீனா ஜெயக்குமார்.

57 வது வார்டில் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே திமுக வேட்பாளர் பட்டியலில் மீனா ஜெயக்குமாருக்கு சீட் வழங்கப்படவில்லை. “பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சே” என்று தற்போது தலையில் கையை வைத்து அமர்ந்திருக்கிறார்.

இதற்கிடையே திமுக மாவட்ட பொறுப்பாளர்களான மருதமலை சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதாவிற்கு 97 வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனைவி இலக்குமி இளஞ்செல்விக்கு 52 வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் சார்பில் களமிறக்கும் பெண்களை கோவை மேயராக்க வேண்டும் என்று தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உச்சக்கட்ட கோஷ்டி மோதலை திமுக சந்தித்து வரும் நேரத்தில் “வெற்றி பெற்றால் தானே மேயர் பதவியெல்லாம் கிடைக்கும்” என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறது அதிமுக வட்டம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?