யாரு STUNT அடிக்கறா? இது திமுக.. ஜல்லிக்கட்டு மாடு.. சும்மா இருக்காது : மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு அமைச்சர் பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 4:29 pm
Minister Duraimurugan - Updatenews360
Quick Share

வேலூர் : தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் நாடகம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் திமுக சார்பில் பாசறை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் நாடகம் என கூறுவது கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. இப்படிப்பட்ட வார்த்தை வருத்தத்திற்குரியது.

காவிரியின் முழு விவரமே அவருக்கு தெரியவில்லை. காவிரி விவகாரத்தில் நாங்கள் தடைகல்லாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் தடைகல்லாக இருந்தது கர்நாடக அரசு தான் .

முதலில் 1926 ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிந்தது என கூறியது கர்நாடகம் . ஆணைய வேண்டுமென நாங்கள் கேட்டதை தடுத்தது கர்நாடகம் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் தடைகல் போட்டதும் கர்நாடக அரசு தான்.

பிறகு நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று இறுதி தீர்ப்பு வாங்கினோம் அதனை ஏற்கமாட்டோம் என கூறியது கர்நாடக அரசு. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் நியமிக்காமல் தடுத்ததும் கர்நாடக அரசு.

காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமும் தடையாக இருந்தது. கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது தவறானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதம் காவிரி குறித்து பிரதமருக்கு எழுதியதை மத்திய அரசு ஏற்காது என்று கூற இவர் யார்?

முதல்வர் அணைக்கட்ட கூடாது என சொல்வது சட்டத்திற்கு புறம்பானது என கூறுகிறார்கள் அது எப்படி சட்டபுறம்பாகும். ஒரு முதலமைச்சரே அதனை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறுகிறார்.

அவர் மாநில தண்ணீர் பங்களிப்பு 1772.5 அளவு தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் அப்படி கிடைத்தால் தான் நமக்கு தண்ணீர் வரும் ஆனால் கர்நாடக முதல்வர் அவர்களின் தண்ணீர் என கூறுகிறார். ஆனால் உச்சநீதிமன்றம் கூறுவது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழ் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு சொந்தம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது .

இந்த நகலை நான் கர்நாடக முதல்வருக்கு அனுப்பி வைக்கிறேன். எங்களின் தலைவரின் கடிதமே தவறு என்றும் அரசியல் நாடகம் என்றும் கூறுகிறார். கர்நாடக முதலமைச்சர் தான் அரசியல் நாடகத்தில் ஈடுபட்டுள்ளார் என துரைமுருகன் கூறினார்

Views: - 619

0

0