இப்படியும் ஒரு சாதனையா… தொடர்ந்து 72 மணிநேரம் கைகுலுக்கி Asia book of record-ல் இடம்பிடித்த தாய் மற்றும் மகள்!!!
Author: Babu Lakshmanan25 September 2021, 7:59 pm
புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், குடும்ப உறவுகள் தழைக்கவும் கரூரில் 72 மணிநேர “கைகுலுக்கும்” ஆசிய சாதனை இன்று நிகழ்த்தப்பட்டது.
குடும்ப உறவுகளும், உலக நாடுகளுக்கிடையே நட்புப் பாராட்டுதல் தழைத்தோங்க வலியுறுத்தியும், கரூரில் தாயும் மகளும் 72 மணி நேரம் கைகுலுக்கி வாழ்த்து சொல்லும் சாதனை நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே, தொடர்ந்து 43 மணி நேரம் கை குலுக்கி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நிலையில், 72 மணி நேரம் தொடர்ந்து கை குலுக்கி அந்த சாதனையை முறியடித்தனர்.
கரூரில் உள்ள தனியார் அரங்கில் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் பத்மாவதியும், அவரது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்ரீதர்ஷினியும் கடந்த 22ம் தேதி காலை 11 மணியளவில் நிகழ்வை தொடங்கினர். ஆசிய சாதனை புத்தகத்துக்கான நடுவர்களான ஹாரிஸ் மற்றும் மார்க்கம் தினேஷ் ஆகியோர் பணியாற்றினர்.
22ம் தேதி காலை 11 மணிக்கு சாதனை நிகழ்வை தொடங்கிய பத்மாவதியும், அவரது மகள் ஸ்ரீதர்ஷினியும் இடைவிடாது 24 மணி நேரம் கைகுலுக்கினர் அதன்பிறகு 10 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். பிறகு சாதனையை தொடர்ந்தனர்.
இந்த 72 மணி நேர சாதனையின்போது, மொத்தம் 30 நிமிடம் மட்டுமே பத்மாவதியும், ஸ்ரீதர்ஷினியும் ஓய்வு எடுத்துக் கொண்டனர். உணவு அருந்தாமலும் இந்த சாதனையை ஏற்படுத்தினர். இதையடுத்து, இந்த 72 மணி நேர கைகுலுக்கி சாதனை செய்தது ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற தேர்வு பெற்றது. மேலும், தமிழ் ஆர்வலர்கள், திருக்குறள் பேரவை புரவலர்கள் மற்றும் அரிமா நிர்வாகிகள் மட்டுமில்லாமல், பொதுநல ஆர்வலர்களும், சமூக நல ஆர்வலர்கள் என்று ஏராளமானோர் இந்த தாய், மகளின் சாதனையை வாழ்த்தினர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமை தாங்கினார்.
0
0