ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி…! வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
Author: kavin kumar10 January 2022, 2:21 pm
மதுரை: வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கௌசல்யா. இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், 6 மாதங்களாக மணிகண்டன் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக பல முறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கௌசல்யா தனது தாயாருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது கௌசல்யாவின் தாய் அழகம்மாள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து அவருக்கு முதலுதவி வழங்கினர். இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயற்சி செய்த தாயார் அழகம்மாள் மற்றும் அவரது மகள் கௌசல்யா ஆகியோரை போலீசார் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மதுரை ஆடசியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், திடீரென ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
0
0