ஓபிஎஸ் சித்து விளையாட்டில் ஜெ.,வே தப்பவில்லை : சுயநலத்தின் மொத்த உருவமே ஓபிஎஸ்தான்… முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 7:30 pm
RB Udayakumar OPS - Updatenews360
Quick Share

ஆறுமுகசாமி ஆணையத்தில் 7முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பன்னீர்செல்வம் 8 வது முறை ஆஜராகி அந்தர்பல்டி அடித்தது ஏன்?

பன்னீர்செல்வத்தின் சித்து விளையாட்டில்  அம்மாவே தப்ப முடியவில்லை, 
அதிமுகவை உங்கள் குடும்ப சொத்தாக்க முயற்சி செய்வது ஒருபோதும் எடுபடாது.

ஆண்டிபட்டி தொகுதியில் லோகிராஜனை தோற்கடித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பன்னீர்செல்வம் மீது கடும் தாக்கு.

அதிமுகவை 1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர்  தொடங்கினார். புரட்சித்தலைவரும் தனது ஆயுள் காலம் முழுவதும் முதலமைச்சராக இருந்தார், அதன் பின்பு 1991 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா மீண்டும் புனித ஆட்சியை மலர செய்தார், அப்போதெல்லாம் அம்மாவின் முதலமைச்சர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

2001ஆண்டில் புரட்சி தலைவி அம்மா முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது, தென் தமிழ் நாட்டில் இருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக மௌன சிரிப்பிலே ஒரு மர்ம தேசத்தை உள்ளடக்கி, ஒரு புண்ணியவான் போல் வெளி தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வம்,  2001 ஆண்டில் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கு அம்மாவிற்கே ஆபத்து வந்தது.

 இதுவரை அண்ணா திமுக முன்னேற்றக் கழகத்தில் சரி ,எந்த இயக்கத்திலும் சரி முதலமைச்சர் பதவிக்கு சட்டபூர்வமாக ஆபத்து வந்தது கிடையாது, அப்படி ஆபத்து வருகிற சூழ்நிலை எதனால் என்பதை பன்னீர்செல்வம்  மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

அதற்குப் பிறகு அம்மா அவர்கள் தன்னுடைய அயராது உழைப்பால் இரவு பகல் பாராது தன்னுடைய தன்னுடைய சேவையால் மீண்டும் 2011 ஆண்டில் அம்மாவின் புனித ஆட்சி மலர்ந்தது.

அப்போதும் அம்மாவின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தது  இந்த முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருவதற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்,

சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற பன்னீர்செல்வம் அன்றைக்கு மீண்டும் முதலமைச்சராக வருகிறார் அவர் செய்த சித்து விளையாட்டுகளை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்,

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகும், அந்த முதலமைச்சர் பதவி பெற்று விடுவதற்காக அவர் செய்த சித்துவிளையாட்டுகளை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

இப்படி முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருகிற போதெல்லாம் அதை தனக்கு சாதகமாக்கி முதலமைச்சர் பதவியில் அமர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ் அவர்களின், சொந்த மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன்னுடைய சட்டமன்ற பதவியை தியாகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து ஓரம் கட்டி, இன்றைக்கு அவர் திமுகவில் அடைக்கலமான சூழ்நிலை உருவாகியதை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்,

சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டி டி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த,  பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழி, மற்றும் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று, அம்மா மறைந்த இரண்டு மாதம் பிறகு அவர் பதவிக்கு ஆபத்துக்கு வந்த பிறகு அம்மா மரணத்தில்  மர்மம் இருக்கிறது, என்று குழப்பத்தை ஏற்படுத்தி அண்ணா திமுகவின் பிரிவிற்கு பிள்ளையார் சுழி போட்டது யார்?

அன்றைக்கு போட்ட பிள்ளையார் சுழி பிரிவினை என்பது இன்று வரை ஒட்டாத கண்ணாடியாக என்றைக்கும் அந்த பிரிவினைக்கு தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திவருபவர் ஓபிஎஸ் ஆவார்,

பன்னீர்செல்வம் சிரிப்பில் ,அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்துக்கொண்டு, வெளித்தோற்றத்தில் காட்டும் மாயத் தோற்றம்,நிச்சயம் ஒரு நாள் மக்கள் அவரின் அரக்க குணம் ,அசுர குணம் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இன்னைக்கு அவர் ஒழித்துக் கட்டியவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது, முதலமைச்சர் பதவி மீது அவர் கொண்ட வெறியின் காரணமாக, புரட்சித்தலைவர் உருவாகிய இயக்கத்தை, அம்மா பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை தனக்கும், தன் பிள்ளைக்கும் குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக, அவர் நடத்தும் நாடகம் தான் அண்ணா திமுக ஒற்றுமையாக வர வேண்டும் என்று நாடகம்,முதலிலே

பிரிவினை நாடகத்தை அரங்கேறி  அம்மா மரணத்தில் மர்மம் என்று சொல்கிறார், ஆறுமுகசாமி இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, எய்ம்ஸ் மருத்துவ குழு அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் எந்தவித சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்கள்.

துணை முதலமைச்சராக இருந்த போது, ஏழு முறை நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பப்பட்டது, ஏன் ஒருமுறை கூட நீதிபதி கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சி சொல்ல முன்வரவில்லை, பதவி போன பின்பு எட்டாவது முறையாக ஆஜராகி அந்தர்பல்டியாக தலைகீழாக மாற்று கருத்துக்களை சொன்னார்,

தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர் தான்  பன்னீர்செல்வம் அவர் எடுத்து வரும் சித்து விளையாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அம்மா அவர்களே தப்ப முடியாமல் கடைசியில முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திடம் சேரும் வகையில் சித்து விளையாட்டை நடத்தி காட்டியவர் பன்னீர்செல்வம்.

சசிகலாவை  மீண்டும் சந்திப்பேன் கட்சி ஒற்றுமையாக அறிவிப்பு கொடுக்கிறார், அவர் நிகழ்த்தி வரும் நாடகத்தை சிரிப்பதா அழுதா தெரியவில்லை, சசிகலாவை சிறையில் தள்ளி, அரசியல் அனாதை ஆகியது சாட்சாத் பன்னீர்செல்வம் தான், சுயநல அரசியலில் மொத்த உருவம், தனக்கு பதவி இல்லை என்று சொன்னால் இந்த கட்சியை அழிக்க தயாராகி விடுவார்.

அதிமுகவை அழிக்காமல் ஓய மாட்டார் என்பதுதான் அவர் எடுத்து வரும் நடவடிக்கை, இந்த இயக்கத்திற்கு என்ன தியாகம் செய்தார் என்பதை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்,

என்னோடு அரசியல் பயணம் செய்த அய்யப்பனை தன்னோடு இணைத்துக் கொண்டு, ஏதோ வெற்றி கொடி நாட்டியது போல் நினைத்துக் கொண்டீர்கள், உங்களுக்கு மானம், வெட்கம்,ரோஷம் இருந்திருந்தால்,  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆண்டிபட்டியில் போட்டியிட்ட லோகிராஜனை  வெற்றி பெற செய்திருந்தால், நீங்கள் அண்ணா திமுகவில் உண்மையான தொண்டன் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள்.

புரட்சி தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதியில்  லோகி ராஜனை தோற்கடிக்க விட்டு, உசிலம்பட்டியில் வெற்றி பெற்றவரை உங்கள் தவப்புதல்வன் மூலம் வத்தலகுண்டுக்கு, அனுப்பி, நீங்க நடத்திய நாடகம் விளைவாக வெற்றி பெற்று இருப்பதாக மமதையுடன் இருக்க வேண்டாம் பன்னீர்செல்வம் அவர்களே.

நான் எந்த தியாகத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன், உங்கள் சித்து விளையாட்டுகளை தோலுரித்துக் காட்ட நான் பின்வாங்க மாட்டேன், 

இந்த அய்யப்பனுக்கு உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் நான் எடப்பாடியாரிடம் எடுத்துச் சென்று, பரிந்துரை செய்தேன், நீங்கள் அவருக்கு பரிசீலனை செய்யவில்லை என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

உசிலம்பட்டி தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் இருந்தவர் நீங்கள்,இன்றைக்கு வெற்றி பெற்று வந்தவரை வேடன் விரித்த வலையில் மாட்டிய மணிப்புறா போன்று நீங்கள் செய்துள்ளீர்கள் இதன்மூலம் எந்த பின்னடைவு எனக்கு வரவில்லை,

அதிமுகவை உங்கள் குடும்ப சொத்தாக நினைப்பதை ஒருபோதும் நான் இருக்கும் வரை நடக்காது, உங்கள் பணம் பாதாள வரை பாயட்டும் அதுக்கு நான் கவலைப்படவில்லை, பார்த்துவிடலாம் எத்தனை நாள் நடக்கிறது உங்கள் திருவிளையாடல், சித்து விளையாட்டு,  எச்சரிக்கையாக சொல்கிறேன் இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம் உங்கள் போலி வேஷம், நரித்தனம் எடுபடாது,

இந்த இயக்கத்துக்காக எடப்பாடியார் கடுமையாக போராடி வருகிறார், அன்று கூட நீங்கள் தனிமைப்பட்டு, அரசியல் அடையாள இல்லாமல், அனாதையாக இருந்த பொழுது, உங்களைஅழைத்து கழகத்தின் தலைவராக்கி ,நாட்டின் துணைமுதலமைச்சராக அழகு பார்த்த எடப்பாடியார் உங்களால் எத்தனை எத்தனை சங்கடங்கள், சோதனைகள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள், உங்களின் உண்மை முகம் தெரிவதற்கு நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.

Views: - 504

0

0