நிரம்பும் தருவாயில் பில்லூர் அணை : உபரி நீர் வெளியேற்ற வாய்ப்பு.. பவானி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan12 October 2021, 5:32 pm
கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் பவானியாற்றின் கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து வெள்ளியங்காடு பகுதியில் அமைந்துள்ளது பில்லூர் அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது.
இதனால் அணையில் தற்போது மொத்த நீர்மட்டம் 97.5 அடியாக உள்ளது. விரைவில் 100 அடி எட்டவுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதனால் பவானியாற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம்,சிறுமுகை உள்ளிட்ட ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
0