ரயில் தண்டவளத்தை தகர்க்க சதியா..? வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு… புதுச்சேரியில் பகீர் சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 2:44 pm
Quick Share

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இரவு நாட்டு வெடிகுண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்ட உடன் அந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது அங்கு ரெயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய துகள்கள் கிடந்தது. மேலும் அங்கு மற்றொரு நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து அந்த வெடிகுண்டை பத்திரமாக சேகரித்தனர். பின்னர் அதனை மணல், மரத்தூள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் வாளியில் வைத்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அங்கு வேறு ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் வேறு எதுவும் கிடைக்கவில்லை.

இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்தது யார்? ரவுடிகள் தங்கள் எதிரிகளை தீர்த்து கட்டம் நோக்கத்தில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்துள்ளனரா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1011

0

0