வகுப்பில் கூச்சலிட்டதால் தலைமையாசிரியர் கொடுத்த PUNISHMENT… மைதானத்தில் சுருண்டு விழுந்து அரசுப் பள்ளி மாணவன் பலி!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 11:23 am
Quick Share

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மைதானத்தில் ஓடிய போது மயங்கி விழுந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மதியம் இடைவேளைக்குப் பிறகு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ரவுண்ட்ஸ் வரும் பொழுது, ஒன்பதாம் வகுப்பு E பிரிவு பயிலும் 40 மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் இருந்ததால் அனைவரும் கூச்சலிட்டு கத்திக்கொண்டு வகுப்பறையில் விளையாடி இருந்ததாக தெரிகிறது.

இதனால் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் அனைவரையும் மைதானத்தில் 4 ரவுண்டு ஓடும்படி கூறியுள்ளார். அப்பொழுது, அப்புக்கள் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த குப்பன் லாவண்யா தம்பதியினரின் மகன் மாணவன் மோகன்ராஜ் உட்பட இரண்டு மாணவர்கள் இரண்டாவது ரவுண்டில் சோர்வாக காணப்பட்டு மயங்கி உள்ளனர்.

உடனடியாக தலைமை ஆசிரியர் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து அருகில் உள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், மோகன்ராஜ் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மருத்துவமனைக்கு வந்த பிறகு தனது மகனிடம் பேசி உள்ளனர். அப்பொழுது, மாணவன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார். அடுத்த 10 நிமிடத்திலே தாயின் மடியிலேயே மாணவன் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மாணவனின் உயிரிழப்பு பள்ளி மாணவர்களிடையும் அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக அணைக்கட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 672

0

0