CM ஸ்டாலின் நிகழ்ச்சியில் வரவேற்பு போர்டு சரிந்து விழுந்து விபத்து : அப்புறப்படுத்தப்பட்ட போர்டு மீண்டும் வைத்ததால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
11 November 2022, 11:53 am
Quick Share

கரூர் : கரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வரவேற்பு போர்டு திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் பயனாளிகள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி நின்று கொண்டிருந்தனர். இதனிடையே, நிகழ்ச்சி அரங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் வழியில், வைக்கப்பட்டிருந்த கட் அவுட் கடும் மழையால் சரிந்து விழுந்தது. நல்ல வேலை முதல்வர் கலந்து கொள்ளும் வேலையில் இந்த சம்பவம் நடைபெறவில்லை.

அங்கு பரேட்டிற்காக நின்று கொண்டிருந்த போலீஸார் அந்த கட் அவுட்டை நகர்த்தி வைத்தனர். விழா மேடையில் முதல்வர் ஏறும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதையடுத்து சுமார் 15 நிமிடம் அந்த கட் அவுட்டை எடுக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே, எடுத்து கொண்டு செல்லப்பட்ட கட் அவுட் ஆட்சியர் பிரபுவின் உத்திரவிற்கிணங்க மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.

‘விவசாயிகளின் பாதுகாவலனே, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே’ என்கின்ற வாசகம் அடங்கிய அந்த கட் அவுட் சாய்ந்த நிலையில், ஆபத்தை உணராமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் வந்து இறங்கும் இடத்தில் மீண்டும் அந்த கட் அவுட் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Views: - 519

0

0