சாலையை ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
24 September 2020, 3:49 pmஈரோடு : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்களுக்காக ஒப்படைக்கப்பட்ட சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது பழிஞ்சூர் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இக்கிராமத்திற்கு செல்ல வழி இல்லாத காரணத்தினால் கொண்டயம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஒரு பகுதியை சாலையாக பிரித்து ஊர் பொதுமக்களுக்காக தானம் செய்துள்ளார்.
ஆனால் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிச்சாமியின் விளை நிலத்தை வாங்கிய சுப்பிரமணி என்பவர் அந்த சாலையையும் சேர்த்து கிரையம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அச்சாலை தனக்குச் சொந்தம் எனவும் யாரும் உபயோகிக்க கூடாது என கூறுவதாகவும் இதனால் தங்களது ஊருக்கு செல்ல வழி இல்லாத காரணத்தினால் ஏற்கெனவே பத்து நாட்களுக்கு முன்பு ஊர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட அச்சாலையை திரும்பப் பெற்றுத் தரக்கோரி சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் ஊர் மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாஜகவினருடன் வந்து மனு அளித்தனர்.