அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்.. மூடப்பட்ட TASMAC கடையை திறக்க கோரி திமுக பிரமுகர் சாலை மறியல்..!

Author: Vignesh
20 June 2024, 3:17 pm

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக் கோரி திமுக பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் தமிழகம் முழுவதும் நிலவிவரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்கடைவீதி பகுதியில் இருந்த அரசு மதுபான கடை கட்டுமானப் பராமரிப்புக்காக மூடப்பட்டது.

இந்த மதுபான கடையை மீண்டும் திறக்க கோரி திமுகவைச் சேர்ந்த பிரமுகர் முத்து என்பவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால், அமைச்சர் மெய்யநாதன் அந்த மதுபான கடையை திறக்க வேண்டாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக திமுக பிரமுகர் முத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் உள்கடை வீதியில் மூடப்பட்ட அந்த மதுபான கடையை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது ஆலங்குடி பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளையும் ஆலங்குடியை விட்டு அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் திமுக பிரமுகர் முத்து மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட வைத்தனர். மதுபான கடையை மீண்டும் திறக்கக்கோரி அமைச்சரை கண்டித்து திமுக பிரமுகரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் 15 நிமிடங்களே நீடித்தாலும், ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?