கட்சிக் கொடியே பிடிக்காத நிர்வாகியின் மகளுக்கு தேர்தலில் ‘சீட்’ : திமுகவினர் இடையே மோதல்..!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 5:04 pm

கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் சேனாதிபதி. இவரது மகள் நிவேதா. 22 வயதே ஆன நிவேதா கோவையில் 97 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் மேயர் வேட்பாளராக முன் நிறுத்த வாய்ப்புள்ளவர்களில் நிவேதாவும் ஒருவர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சேனாதிபதி, தனது மகள் நிவேதாவுடன் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்திற்கு திமுகவினருடன் ஊர்வலமாக வந்தார்.

அப்போது சீட் கிடைக்காத திமுக.,வினர் திமுக மாவட்ட செயலாளர் சேனாதிபதியை முற்றுகையிட்டனர். கோஷங்களை எழுப்பினர். மேலும், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொடியே பிடிக்காத தனது மகளுக்கு சீட் கொடுத்த மருதமலை சேனாதிபதி 10 ஆண்டுகள் கட்சிக்காக பாடுபட்ட தங்களை ஏமாற்றிவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியுள்ளதாக குமுறுகின்றனர் திமுக தொண்டர்கள்

கட்சியில் உள்ளடி வேலை செய்பவர்கள் குறித்து தலைமைக்கு அறிவுறுத்தியதால் பழிவாங்குவதற்காகவே இப்படி செய்வதாக கூறும் தொண்டரக்ள் இதற்கு மாவட்ட பொறுப்பாளர் பதில் கூறியே ஆகவேண்டும் என்றனர்.

இதனிடையே சேனாதிபதியை கண்டித்து முழக்கம் எழுப்பியவர்களுக்கும், சேனாதிபதியுடன் வந்தவர்களுக்கும் இடையே ரகளை ஏற்பட்டது. இரு தரப்பினரையும் காவல் துறையினர் சமரசப்படுத்தனர்.

கட்சி பொறுப்பில் இருக்கும் பெண்கள் என்று கூட பாராமல் சேனாதிபதியின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாகவும், கேள்வி எழுப்பினால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கொந்தளிக்கின்றனர்.

கோவையில் திமுக ஏற்கனவே பலம் குறைந்து உள்ள சூழலில், வாரிசுகளுக்கு சீட் கொடுத்து தொண்டர்களை இழந்து வரும் திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!