திராவிட மாடல் எல்லாம் கிடையாது… தமிழ்நாடு மாடல்தான் ; திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசித்த சீமான் கருத்து!

Author: Babu Lakshmanan
5 September 2022, 2:24 pm
Quick Share

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் கிடையாது என்றும், தமிழ்நாடு மாடல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தி, துலாபாரம் கொடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது ;- ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். ராகுல்காந்திக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது. கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

கஞ்சா, குட்கா, ஹெராயின், போன்றவை முருகன் ஆணையாக போதை பொருள்கள் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் டாஸ்மார்க் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா?. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்.

விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா பேசி வருவதால், அவருக்கு எனது நன்றி. திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆடியோ வெளியிட்டு மனச்சான்றோடு பேசிய திமுக கவுன்சிலருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், எனக் கூறினார்.

Views: - 508

0

0