வாய்க்கொழுப்போடு பேசிட்டு இருக்காரு… வெளிநாட்டு பயணம் இல்ல… வெத்து பயணம் தான் அது ; செல்லூர் ராஜு காட்டம்..!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 2:28 pm
Quick Share

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருவதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி செல்லக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பக்தர்களுக்கு கேசரி, சுண்டல், புளியோதரை ,லெமன் சாதம், தேங்காய் சாதம், வெஜிடபிள் ரைஸ். சாம்பார் சாதம், நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக் கூடிய திருப்பரங்குன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானத்தை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏழு வகையான அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைத்து மதத்தினருடைய விழாக்களிலும், அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்படும். ஜாதி, சமய வேறுபாடு இன்றி அதிமுக இருந்து வருகிறது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த அதிமுக தான் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் போன்ற கிறிஸ்தவ பெருவிழாக்களின் போதும் அன்னதானம் வழங்கி வருகிறோம். இஸ்லாமியர்களின் ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக வழங்கி வருகிறது.

அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது, மறைந்த எனது மகன் மற்றும் எனது தாயார் பெயரில் இருக்கக்கூடிய சார்பில் எனது குடும்பத்தினருடன் இணைந்து எனது வீட்டருகே ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது.

கர்நாடக துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார். அணை கட்டுவது குறித்து டிகே சிவக்குமார் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்கு திமுக அரசு மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இணைந்து வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளும் உடன் இருந்து துரோகம் இழைத்து வருகின்றன.

தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் என்னவென்று தெரியாமலே வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். 8000 கோடி முதலீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், 3000 கோடி தான் கொண்டு வந்துள்ளார் என்கின்றார்கள். ஆனால், உண்மை நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும் பெருமளவிலான முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை.

கடந்த ஆட்சி காலத்தில் எங்களது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு இழுத்து வந்தார். வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கூட வெளியிட்டார். தமிழக முதல்வர் அவர்களுடைய வெளிநாட்டு பயணம் வெத்து பயணம், என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை, மாவட்ட நிர்வாகிகள் எம் எஸ் பாண்டியன், வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 300

1

0