தென்னிந்தியாவின் முதல் தியேட்டர்.. கோவை டிலைட் தியேட்டரை இடிக்க முடிவு : சினிமா ரசிகர்கள் கவலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 6:55 pm
delight
Quick Share

தென்னிந்தியாவின் முதல் தியேட்டர்.. கோவை டிலைட் தியேட்டரை இடிக்க முடிவு : சினிமா ரசிகர்கள் கவலை!!!

இந்திய சினிமாக்கள் தற்போது மிகவும் வளர்ந்து வரும் நிலையில் புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு சினிமாவும், திரையரங்குகளும் நகர்ந்து விட்டன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சில திரையரங்குகள் ஈடுகொடுக்க முடியாமல் தியேட்டர்களை இடித்து விட்டு வணிகவளாகமாக மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சினிமா நுழைந்த காலத்தில், தென்னிந்தியாவில் கோவையில் தான் அதிகளவில் ஸ்டூடியோக்கள், தியேட்டர்கள் இருந்தன.

ஐரோப்பியர்கள் ஆங்கில மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், ஊமை படங்கள், நாடகங்கள் போன்றவற்றை சென்னை உள்பட பல இடங்களில் திரையிட்டு வந்தனர். இந்நிலையில், திருச்சியில் தென்னிந்திய ரயில்வே ஊழியரான சாமிகண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரரான டூ பாண்ட் என்பவரிடம் இருந்து ஊமை படங்களை விலைக்கு வாங்கி காட்சிப்படுத்தி வந்தார்.

பின்னர், அவர் படங்களை பொதுமக்களுக்கு காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார். அதில், ஒன்று தான் துணிகளை கட்டி அமைக்கப்பட்ட டென்ட் சினிமா. ஒரு புதிய ஊருக்கு சென்றால் அங்கு இருக்கும் காலியிடங்களில் கூடாரம் அமைத்து சினிமாக்களை காட்சிப்படுத்தினார்.

அவரின் டென்ட் சினிமா தமிழ்நாடு மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் பயணித்து மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தது. துணி கூடாரத்தை விட நிரந்தரமாக ஒரு கட்டிடம் கட்டி திரைப்படங்களை காட்ட வேண்டும் என்று எண்ணிய சாமிகண்ணு வின்சென்ட் கடந்த 1914-ல் முதல் நிரந்தர தியேட்டர் ஒன்றை கோவையில் உருவாக்கினார்.

அந்த தியேட்டர் தான் வெரைட்டிஹால் திரையங்கம். இது தற்போது டிலைட் தியேட்டர் என அழைக்கப்படுகிறது. தியேட்டர் இருக்கும் சாலை இன்றளவும் வெரைட்டிஹால் ரோடு என்றே அழைக்கப்படுகிறது. இந்த டிலைட் தியேட்டர் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர தியேட்டர் என அழைக்கப்படுகிறது. நூற்றாண்டை கடந்த தியேட்டரில் தொடர்ந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தது.

வாரம் இரண்டு, மூன்று புதிய திரைப்படங்கள் வந்தாலும், இந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களின் பழைய படங்கள் தான் அதிகளவில் திரையிடப்பட்டு வந்தது. மூன்று காட்சிகள் தினமும் திரையிடப்பட்டது.

பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்ற ஹீரோக்களின் பழைய படங்கள் திரையிடும் போது எல்லாம் பட்டாசு வெடித்தும், மாலையிட்டு கொண்டாடி வந்தனர்.

ஆனால், தியேட்டருக்கு என பெரிய அளவில் வருமானம் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தியேட்டரை நம்பி பல ஆண்டுகளாக தியேட்டர் ஆப்ரேட்டர், டிக்கெட் கொடுப்பவர், காவலாளி, தூய்மை பணியாளர்கள் என 4-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வருகிறது.

இவர்களுக்காகவும் தியேட்டர் இயக்கப்பட்டு வந்தது. கடைசியாக ரஜினி நடித்த மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது. போதிய வருமானம் இல்லை. சரிவர பராமரிக்க முடிவதில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

தியேட்டர் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், வணிக வளாகம் அமைத்தாலும் கூட கட்டாயம் ஒரு மினி தியேட்டராவது அதில் இருக்கும் என்ற நம்பிக்கையில் தியேட்டரில் பணியாற்றிய ஊழியர்கள் உள்ளனர்.

வளர்ந்து வரும் புதிய டெக்னாலஜி தியேட்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் இடிக்கப்படுவது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்கள், பொதுமக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 220

0

0