வெள்ளியங்கிரி கோவிலில் அர்ச்சகராக அந்நியர்கள்? துணை போகும் அறநிலையத்துறை : சிவனடியார் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 1:23 pm
Sivanadiyar Complaint - Updatenews360
Quick Share

கோவை : வெள்ளியங்கிரி கோவில் அரசால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பூசாரி என கூறி ஆகம விதிகளுக்கு மாறாகவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இந்து மக்கள் கட்சி சார்பில் சங்கு ஊதி புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி திருக்கோவிலில் அரசால் அங்கீகரிக்கப்படாத மூன்று பேர் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் செந்தில்குமார் (சிவனடியார்) என்பவர் சங்கு ஊதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அங்குள்ள பூசாரிகள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்த பொழுது மூன்று நபர்கள் தான் பணியில் உள்ளார்கள் என தெரிவித்த நிலையில் அங்கு மேலும் அரசால் அங்கீகரிக்கப்படாத நாகராஜ், கிருஷ்ணன், மற்றும் அவரது மகன் உட்பட 5 பேர் பூஜை செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு சுமார் 18 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாகவும் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இம்முறை சங்கு ஊதி கோரிக்கையை தெரிவிப்பதாகக் கூறினார்.

இதற்கு தீர்வு காணவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அங்கு நடைபெறும் இச்செயலானது கோவை மாவட்ட இந்து அறநிலையத் துறை அலுவலர்களுக்கும் தெரியும் எனவும் அவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வெள்ளியங்கிரி கோவில் ஆய்வு செய்தபொழுது அரசால் அங்கீகரிக்கப்படாத அந்த ஐந்து நபர்கள் அவருக்கு மரியாதை அளித்து உள்ளனர் எனவும் கூறினார்.

Views: - 869

0

0