ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் இழப்பு… விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை… உறவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Author: Babu Lakshmanan
6 June 2022, 1:18 pm
Quick Share

திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணலி புதுநகர் பகுதியைச் சார்ந்த பவானி (29) என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாக்கியராஜ் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பவானியை கணவரும், பெற்றோரும் கண்டித்துள்ளனர். இருப்பினும், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 சவரன் தங்க நகையை விற்று அதன் பணத்தை வங்கியில் செலுத்தி ரம்மி விளையாடி முழு பணத்தையும் இழந்துள்ளார்.

மேலும், பவானியின் இரண்டு தங்கைகளிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி அதையும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணத்தை முழுவதுமாக இழந்ததை சில தினங்களுக்கு முன்பு தங்கையிடம் கூறியதாக தெரிகிறது.

நேற்று இரவு குளித்து விட்டு வருவதாக சென்ற பவானி வெகுநேரமாகியும் வெளியே வராததால் கணவர் கதவை தட்டி பார்த்த போது, பவானி தூக்கிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பவானி ரயிலில் வேலைக்கு செல்வதாகவும், ரயிலில் பயணிக்கும் போது பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மியை விளையாட தொடங்கிய நிலையில், அதற்கு அடிமையாகி இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

Views: - 621

0

0