கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி: 108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகிய பெண் குழந்தை!
Author: kavin kumar2 November 2021, 2:56 pm
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரீஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி கஸ்தூரி (23) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு நேற்றிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் கர்ப்பிணி பெண் கஸ்தூரியை ஏற்றிக்கொண்டு எழுச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புறப்பட்டது.
அப்போது வாலாஜாபாத் – வண்டலூர் நெடுஞ்சாலையை வந்தடைந்த போது கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. பின்னர் ஆம்புலன்சை நிறுத்திய ஓட்டுனர் ரவிக்குமார் அவசர மருத்துவ உதவியாளர் சதீஷ் ஆகிய இருவரும் கஸ்தூரிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் சுகப்பிரசவத்தில் கஸ்தூரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் சேயையும் பத்திரமாக கொண்டு சென்று எழுச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். சிறப்பாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் மருத்துவ உதவியாளரையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
0
0