நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 3:38 pm
Quick Share

வேலூர் : மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடைகளை கடந்து, புதிய சிந்தனைகளுடன் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி நிகழ்நிலை பல்கலைக்கழகத்தில் இன்று,
பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற 37வது பட்டபடிப்பு
விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 62 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் உள்பட 8,383 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் ஆளுநர் பேசியதாவது :- நாட்டின் வளர்ச்சிக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் நாட்டில் அனைவருக்கும் சமமான வளர்ச்சி ஏற்படும். மேலும், மாணவர்கள் விடாமுயற்சியுடன் சாமி விவேகானந்தர் பொன் மொழிகளையும் பின்பற்ற வேண்டும். அப்போது, நாம் நினைத்ததை அடைய முடியும்.

நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி வழங்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். கடந்த காலங்களை விட தற்போது நம் நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. தற்போது, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நம் நாட்டில் தற்போது விஞ்ஞான வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. பள்ளி மாவணவர்கள் 750 பேர் சேர்ந்து 75 சிறிய செயற்க்கைக்கோள் அனுப்பும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இதை யோசித்து கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு இந்தியாவில் விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துள்ளது. 2030க்குள் இந்தியா 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்தி துறையில் இலக்கு வைத்துள்ளோம். ஆனால் கடந்த ஆண்டே அந்த இலக்கை அடைந்துள்ளோம்.

2030 ஆண்டுக்குள் 500 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்தி இலக்கு வைத்துள்ளோம். அதையும் முன் கூட்டியே எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நம் நாட்டில் ஏற்கனவே 400 ஸ்டாட் ஆப் நிறுவனங்கள் இருந்தது. தற்போது 80 ஆயிரமாக உயந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கூட இப்போது ஸ்டாட்ஆப் நிறுவனங்கள் வந்துள்ளன.

டிஜிட்டல் திட்டத்தில் இந்தியா ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது. இவை மேலும் அதிகரிக்கும். உலக அமைதியை காக்க இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாணவர்கள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். தோல்விகளை உடைத்து எறிந்து மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் சிந்தித்து செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும், என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

மேலும் விழாவில் பேசிய அமெரிக்க தேசிய அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன், “மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை இருந்தால் கண்டிப்பாக தான் நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்காலத்தில் சவால்களையும், வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும்போது அனைவரும் ஆராய்ச்சியாளர்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடரும்போது ஆர்வத்தை எப்பொழுதும் வெளிப்படுத்தியபடி இருக்க வேண்டும். கேள்விகளை கேளுங்கள், திறந்த மனதுடன் இருங்கள். ஒரு ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும். நல்ல சிந்தனைகள், புதிய உத்வேகம் இருக்க வேண்டும். இந்த மனநிலையில் மாணவர்கள் இருந்தால், வாழ்க்கை பயணம் முழுவதும் முன்னோக்கி செலுத்தி பெரும் சவால்களை சமாளிக்க முடியும்.

உலகில் பல்வேறு இடங்களில் குடிநீரை வழங்குதல் மற்றும் உருமாறிய நோய்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசிகளை வழங்குதல் போன்ற சவால்கள் உள்ளன. இதற்கு விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தொழில் முனைவர்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். எனவே, இது போன்ற பிரச்சனைகளை புதுமையான முறையில், ஆக்கபூர்வமான தீர்வுகளுடன் எதிர்கொள்ள வேண்டும், என அவர் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

Views: - 637

0

0