தனியார் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 சிலைகள் மீட்பு… வெளிநாட்டுக்கு கடத்த திட்டமா..? என விசாரணை

Author: Babu Lakshmanan
23 July 2022, 9:55 am
Quick Share

தஞ்சை : தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடியாக மீட்டனர்.

தஞ்சையை சேர்ந்தவர் கணபதி. இவர் தஞ்சையில் ஆர்ட் வில்லேஜ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் பழங்கால சிலைகளை முறையான ஆவணம் இன்றி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி தலைமை டி.ஜி.பி டாக்டர் ஜெயந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு ரவி, மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி திட்டத்தை வகுத்தனர். அதன்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, டி.எஸ்பி. கதிரவன் தலைமையில் , இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் 12 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, முறையான ஆவணங்கள் ஏதுமின்றி பழங்கால சிலைகளை கணபதி வைத்திருந்தது தெரியவந்தது. பெருமாள், ரிஷபதேவர், சிவகாமி அம்மன், மகாவீரர் உள்ளிட்ட 14 சிலைகள் எந்தவித ஆவணமின்றி அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து, 14 சிலைகளையும் போலீசார் மீட்டு கணபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 593

0

0