கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற காவலர்கள்..மர்மபொருள் வெடித்ததில் படுகாயம்: ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..!!

Author: Rajesh
27 March 2022, 5:51 pm
Quick Share

அரக்கோணத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மையப் பகுதியாக விளங்கும் திருமலை ஆச்சாரி தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகர காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் சந்தோஷ் மற்றும் ஏழுமலை ஆகியோர்கள் அழைத்துக்கொண்டு தகவல் கிடைத்த பகுதியில் ரியாஸ் அகமது என்பது வீட்டில் ஆய்வு மேற்கொள்ள உள்ளே சென்று உள்ளனர்.

ஆய்வுக்காக சென்ற காவலர்கள் சம்பந்தப்பட்ட நபரின் வீடு தெரியாததால் அந்த பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்ற நபரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற காவலர்களை கண்டதும், சம்பந்தப்பட்ட நபர் கையில் வைத்திருந்த பையை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

சந்தோஷ் மற்றும் ஏழுமலை பையை சோதனை செய்தபோது அதில், இருந்த மர்ம பொருள் வெடித்துள்ளது. இதனால், 2 பேரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்த இருவரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற வந்த காவலர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் கேட்டதற்கு சம்பந்தப்பட்ட வீட்டில் பன்றி பிடிப்பதற்கு மாங்கொட்டையின் வெடிபொருள் செய்து பன்றி பிடிப்பதற்காக வைத்திருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ரியாஸ் அகமது என்பவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 688

0

0